அத்தியாயம் : 1storage.googleapis.com/wzukusers/user-20559968/documents/... ·...

Preview:

Citation preview

அத்தியாயம் : 1

அத்தியாயம் : 1

அல் பாத்திஹா – தோற்றுவாய் [footnoteRef:2] [2: அல் ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது. திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயம் குறித்துச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது. பார்க்க 15:87]

மொத்த வசனங்கள் : 7

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

3. தீர்ப்பு நாளின்1 அதிபதி.

4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

5. எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!

6, 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப் படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.26

அத்தியாயம் : 2

அத்தியாயம் : 2

அல் பகரா - அந்த மாடு [footnoteRef:3] [3: அல் பகரா என்ற அரபுச் சொல்லின் பொருள் அந்த மாடு. திருக்குர்ஆனிலேயே மிகப் பெரிய அத்தியாயம் இது தான். இந்த அத்தியாயத்தில் 67 வது வசனம் முதல் 71 வது வசனம் வரை மாட்டுடன் தொடர்புடைய அதிசய நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இடம் பெற்றதன் காரணமாகவே "அந்த மாடு'' என்ற பெயர் வந்தது.காளை, பசு இரண்டையும் இச் சொல் குறித்தாலும், பெயர் வரக் காரணமான 67-71 வசனங்களைக் கவனித்தால் காளையையே குறிக்கிறது என அறியலாம்.]

மொத்த வசனங்கள் : 286

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. அலிஃப், லாம், மீம்.2

2. இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி.

3. அவர்கள் மறைவானவற்றை3 நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.

4. (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும்4 அவர்கள் நம்புவார்கள். மறுமையையும்1 உறுதியாக நம்புவார்கள்.

5. அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர் வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள்.

6. (ஏக இறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

7. அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.

8. "அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பினோம்'' எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.

9. அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.

10. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

11. "பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது "நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.

12. கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.

13. "இந்த மக்கள் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது, "இம்மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நம்புவோமா?'' எனக் கேட்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே மூடர்கள். ஆயினும் அறிந்து கொள்ள மாட்டார்கள்.

14. நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன்5 தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.

15. அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான்.6 அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான்.

16. அவர்களே, நேர் வழியை விற்று வழி கேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர் வழி பெற்றோரும் அல்லர்.

17. ஒருவன் நெருப்பை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கிய போது அவர்களின் ஒளியைப் போக்கி, பார்க்க முடியாமல் இருள்களில்429 அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழி கேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது.

18. (இவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே இவர்கள் (நல் வழிக்கு) திரும்ப மாட்டார்கள்.

19. அல்லது (இவர்களது தன்மை,) வானத்திலிருந்து விழும் மழை போன்றது. அதில் இருள்களும்,429 இடியும், மின்னலும் உள்ளன. இடி முழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி தமது விரல்களைக் காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். (தன்னை ஏற்க) மறுப்போரை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

20. அவர்களின் பார்வைகளை மின்னல் பறித்து விடப் பார்க்கிறது. (அது) அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தும் போது அதில் நடக்கின்றனர். அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது நின்று விடுகின்றனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களின் செவியையும், பார்வைகளையும் போக்கியிருப்பான். எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

21. மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனை யிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.

22. அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்.288 வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!

23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!7

24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.

25. "நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன'' என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது'' எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும்8 உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

26. கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் "இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை'' என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் "இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?'' என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம்9 அல்லாஹ் பலரை வழி கேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர் வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழி கேட்டில் விடுவதில்லை.

27. அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை உறுதிப்படுத்திய பின் முறிக்கின்றனர். இணைக்கப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டதை (உறவை) முறிக்கின்றனர். பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். அவர்களே இழப்பை அடைந்தவர்கள்.

28. அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள்? உயிரற்று இருந்த உங்களுக்கு அவன் உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்!

29. அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

30. "பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்''46 என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது "அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே'' என்று கேட்டனர். "நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்'' என்று (இறைவன்) கூறினான்.

31. அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான்.

32. "நீ தூயவன்.10 நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.

33. "ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, "வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?'' என (இறைவன்) கேட்டான்.

34. "ஆதமுக்குப் பணியுங்கள்!''11 என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.

35. "ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில்12 குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை13 (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்'' என்று நாம் கூறினோம்.

36. அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன'' 175 என்றும் நாம் கூறினோம்.

37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை14 தமது இறைவனிட மிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

38. "இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்!15 என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம்.

39. "(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்'' (என்றும் கூறினோம்.)

40. இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்! என் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்! உங்கள் உடன்படிக்கையை நான் நிறை வேற்றுவேன். என்னையே அஞ்சுங்கள்!

41. உங்களிடம் உள்ள(வேதத்)தை உண்மைப்படுத்தும் வகையில் நான் அருளிய (குர்ஆன் எனும் வேதத்)தை நம்புங்கள்! இதை மறுப்போரில் முதன்மையாகாதீர்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!

42. அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்!

43. தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்!

44. வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

45. பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

46. தமது இறைவனைச் சந்திக்கவுள்ளோம் என்றும், அவனிடம் திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்றும் அவர்கள் நம்புவார்கள்.

47. இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!16

48. ஒருவர் இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை1 அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது.17 எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

49. ஃபிர்அவ்னின் ஆட்களிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றியதை எண்ணிப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்தார்கள். உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்து விட்டு, பெண்(மக்)களை உயிருடன் விட்டனர். உங்கள் இறைவனிடமிருந்து இது மிகப் பெரும் சோதனையாக இருந்தது.

50. உங்களுக்காகக் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் ஆட்களை நாம் மூழ்கடித்ததை எண்ணிப் பாருங்கள்!

51. மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்!18 அவருக்குப் பின் நீங்கள் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.19

52. நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம்.

53. நீங்கள் நேர் வழி பெறுவதற்காக வேதத்தையும், (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் மூஸாவுக்கு நாம் வழங்கியதை எண்ணிப் பாருங்கள்!

54. "என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கு இழைத்து விட்டீர்கள்.19 எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்!20 இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

55. "மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்'' என்று நீங்கள் கூறிய போது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடி முழக்கம் தாக்கியது.21

56. பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நீங்கள் மரணித்த பின் உங்களை உயிர்ப்பித்தோம்.

57. உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். "நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!'' (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

58. "இவ்வூருக்குள் செல்லுங்கள்! அங்கே விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள்! வாசல் வழியாக பணிவாக நுழையுங்கள்! 'மன்னிப்பு' என்று கூறுங்கள்! உங்கள் தவறுகளை மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம்'' என்று நாம் கூறியதை எண்ணிப்பாருங்கள்!

59. ஆனால் அநீதி இழைத்தோர், தமக்குக் (கூறப்பட்டதை விடுத்து) கூறப்படாத வேறு சொல்லாக மாற்றினார்கள். எனவே அநீதி இழைத்து, குற்றம் புரிந்ததால் வானத்திலிருந்து வேதனையை அவர்களுக்கு இறக்கினோம்.

60. மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது "உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!'' என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த் துறையை அறிந்து கொண்டனர். "அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!'' (என்று கூறினோம்)

61. "மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக் காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப்படுத்துவான்'' என்று நீங்கள் கூறிய போது, "சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு'' என்று அவர் கூறினார்.389 அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக் கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.

62. நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.

63. "உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்! அப்போது நீங்கள் (நம்மை) அஞ்சுவீர்கள்'' என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்!22

64. இதன் பின்னரும் புறக்கணித் தீர்கள். அல்லாஹ்வின் அருளும், கருணையும் உங்களுக்கு இல்லாதிருந்தால் இழப்பை அடைந்திருப்பீர்கள்!

65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! "இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம்.23

66. அதை அக்காலத்தவருக்கும், அடுத்து வரும் காலத்தவருக்கும் பாடமாகவும், (நம்மை) அஞ்சுவோருக்குப் படிப்பினையாகவும் ஆக்கினோம்.

67. "ஒரு காளை மாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்'' என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறிய போது "எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா?'' என்று கேட்டனர். அதற்கு அவர், "அறிவீனனாக நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்'' என்றார்.24

68. "உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அது எத்தகையது' என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்'' என்று அவர்கள் கேட்டனர். "அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!'' என்று அவர் கூறினார்.

69. "உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அதன் நிறம் என்ன' என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்'' என்று அவர்கள் கேட்டனர். "அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான்'' என்றார்.

70. "உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அது எத்தகையது' என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்'' என்று அவர்கள் கூறினர்.

71. "அது நிலத்தை உழவோ, விவசாயத் துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது'' என்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார். "இப்போது தான் சரியாகச் சொன்னீர்'' என்று கூறி செய்ய முடியாத நிலையிலும் (மிகுந்த சிரமப்பட்டு) அம்மாட்டை அவர்கள் அறுத்தனர்.

72. நீங்கள் ஒருவரைக் கொன்று விட்டு அது குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவன்.

73. "அதன் ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்!'' என்று கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பிக்கிறான். நீங்கள் விளங்குவதற்காக தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான்.24

74. இதன் பின்னர் உங்கள் உள்ளங்கள் பாறையைப் போன்று அல்லது அதை விடக் கடுமையாக இறுகி விட்டன. ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள் பிளந்து அதில் தண்ணீர் வருவதுண்டு. அல்லாஹ்வின் அச்சத்தால் (உருண்டு) விழும் பாறைகளும் உள்ளன. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

75. அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.

76. நம்பிக்கை கொண்டோரைக் காணும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். அவர்களில் ஒருவர் மற்றவருடன் தனியாக இருக்கும் போது "அல்லாஹ் உங்களுக்கு அருளியதை அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) கூறுவதால் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதிடுவார்களே? விளங்க மாட்டீர்களா?'' என்று கேட்கின்றனர்.

77. அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிகிறான் என்பதை அறிய மாட்டார்களா?

78. அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.

79. தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது' என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்த தற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.

80. குறிப்பிட்ட நாட்கள் தவிர நரகம் எங்களைத் தீண்டாது எனவும் அவர்கள் கூறினர். "அல்லாஹ்விடம் (இது பற்றி) ஏதாவது உடன்படிக்கை செய்துள்ளீர்களா? (அவ்வாறு செய்திருந்தால்) அல்லாஹ் தனது உடன்படிக்கையை மீறவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று கேட்பீராக!

81. அவ்வாறில்லை! யாராக இருந்தாலும் தீமை செய்து, அவர்களின் குற்றம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளுமானால் அவர்கள் நரகவாசிகளே. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

82. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் தாம் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

83. "அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்'' என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.

84. "உங்கள் இரத்தங்களை ஓட்டிக் கொள்ளாதீர்கள்! உங்கள் வீடுகளிலிருந்து உங்களை (சேர்ந்தோரை) வெளியேற்றாதீர்கள்!'' என்று உங்களிடம் உறுதி மொழி எடுத்த போது, நீங்களே சாட்சிகளாக இருந்து ஏற்றீர்கள்.

85. பின்னர் நீங்கள் உங்களை (சேர்ந்தவர்களை)க் கொலை செய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள்! உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீட்டிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில்1 கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

86. அவர்கள் தாம், மறுமையை1 விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது; அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

87. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள்.

88. "எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள் ளன'' என்று கூறுகின்றனர். அவ்வாறில்லை! (தன்னை) மறுத்ததால் அல்லாஹ் அவர்களைச் சபித்தான்.6 அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.

89. (ஏக இறைவனை) மறுப்போருக்கு எதிராக அவர்கள் இதற்கு முன் உதவி தேடி வந்தனர். அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்த போது, (அதாவது) அவர்கள் அறிந்து வைத்திருந்தது25 அவர்களிடம் வந்த போது, அதை (ஏற்க) மறுத்து விட்டனர். மறுப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது.6

90. அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது மிகவும் கெட்டது. அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை அல்லாஹ் அருளியதில் பொறாமைப்பட்டதே இதற்குக் காரணம். எனவே கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானார்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனை இருக்கிறது.

91. "அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்'' என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!

92. மூஸா தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். அவருக்குப் பின் அநீதி இழைத்து காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.19

93. உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தினோம்.22 "உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! செவிமடுங்கள்!'' (எனக் கூறினோம்). "செவியுற்றோம்; மாறு செய்தோம்'' என்று அவர்கள் கூறினர். (நம்மை) மறுத்ததால் அவர்களின் உள்ளங்களில் காளைக் கன்றின் பக்தி ஊட்டப்பட்டது.19 "நீங்கள் (சரியான) நம்பிக்கை கொண்டிருந்தால் உங்கள் நம்பிக்கை உங்களுக்குக் கெட்டதையே கட்டளை இடுகின்றதே'' என்று கேட்பீராக!

94. "அல்லாஹ்விடம் உள்ள மறுமை1 வாழ்க்கை ஏனைய மக்களுக்கு இல்லாமல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது என்பதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் சாவதற்கு ஆசைப்படுங்கள்!'' என்று கூறுவீராக!

95. அவர்கள் செய்த வினை காரணமாக ஒரு போதும் அதற்கு ஆசைப்பட மாட்டார்கள். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.

96. மற்ற மனிதர்களை விட, (குறிப்பாக) இணை கற்பித்தோரை விட வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்! அவர்களில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்நாளாக அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு வாழ்நாள் அளிக்கப்படுவது வேதனையிலிருந்து அவரைத் தடுக்கக் கூடியதாக இல்லை. அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.

97. யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்.152 & 312 "இது, தனக்கு முன் சென்றவற்றை4 உண்மைப்படுத்தக் கூடியதாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியாகவும், நற்செய்தியாகவும் உள்ளது'' என்று கூறுவீராக!

98. அல்லாஹ்வுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.

99. தெளிவான வசனங்களை (முஹம்மதே!) உமக்கு அருளினோம். குற்றம் புரிவோரைத் தவிர (யாரும்) அதை மறுக்க மாட்டார்கள்.

100. அவர்கள் ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவர்களில் ஒரு பகுதியினர் அதை வீசி எறிந்ததில்லையா? மாறாக அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

101. அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் (முஹம்மத்) அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் கொடுக்கப்பட்டோரில்27 ஒரு பிரிவினர் ஏதும் அறியாதோரைப் போல் அல்லாஹ்வின் வேதத்தைத் தமது முதுகுக்குப் பின்னால் வீசி எறிந்தனர்.

102. ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள்5 கூறியதை இவர்கள் பின்பற்றி னார்கள். (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை.28 ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத்395 என்ற ஷைத்தான்களே5 மறுத்தனர். "நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவைனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில்1 எந்த நற்பேறும் இல்லை' என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

103. அவர்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ்விட மிருந்து கிடைக்கும் கூலி மிகவும் சிறந்தது. அவர்கள் அறிய வேண்டாமா?

104. நம்பிக்கை கொண்டோரே! "ராஇனா' எனக் கூறாதீர்கள்! "உன்ளுர்னா' என்று கூறுங்கள்! செவிமடுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.29

105. (ஏக இறைவனை) மறுக்கும் வேதம் கொடுக்கப்பட்டோரும்27 இணை கற்பித்தோரும் உங்கள் இறைவனிட மிருந்து ஏதேனும் நன்மை உங்களுக்கு அருளப்படுவதை விரும்ப மாட்டார்கள். நாடியோருக்கு மட்டும் தனது அருளை அல்லாஹ் வழங்குவான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

106. ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால்30 அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததையோ, அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

107. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?

108. இதற்கு முன் மூஸாவிடம் (கேள்வி) கேட்கப்பட்டது31 போல் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா? நம்பிக்கையை (இறை) மறுப்பாக மாற்றுபவர் நேர் வழியை விட்டு விலகி விட்டார்.

109. நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை) மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில்27 பெரும் பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள்! அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

110. தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.

111. "யூதராகவோ, கிறித்தவராகவோ இருப்பவரைத் தவிர (வேறு யாரும்) சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்'' என்று கூறுகின்றனர். இது அவர்களின் வீண் கற்பனை. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக!

112. அவ்வாறில்லை! தமது முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறமும் செய்பவருக்கு அவரது கூலி அவரது இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

113. "கிறித்தவர்கள் எதிலும் இல்லை' என்று யூதர்களும், "யூதர்கள் எதிலும் இல்லை' என்று கிறித்தவர்களும் வேதத்தைப் படித்துக் கொண்டே கூறுகின்றனர். அறியாத மக்களும் அவர்களைப் போலவே கூறுகின்றனர். அவர்கள் முரண்பட்டதில் அவர்களுக் கிடையே கியாமத் நாளில்1 அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்.

114. அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்?32 பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில்1 கடுமையான வேதனையுமுண்டு.

115. கிழக்கும், மேற்கும் அல்லாஹ் வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

116. "அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன்.10 வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.

117. (அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து "ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.

118. "அல்லாஹ் எங்களிடம் பேசக் கூடாதா? அல்லது எங்களுக்கு ஓர் சான்று வரக் கூடாதா?'' என்று அறியாதோர் கூறுகின்றனர். இவர்களுக்கு முன் சென்றோர் இவர்களின் கூற்றைப் போலவே கூறினர். அவர்களின் உள்ளங்கள் ஒத்தவையாக இருக்கின்றன. உறுதியான நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

119. நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் (முஹம்மதே!) உம்மை நாம் அனுப்பியுள்ளோம். நரகவாசிகளைப் பற்றி உம்மிடம் கேட்கப்படாது.

120. யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். "அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்'' எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.

121. நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் படிக்க வேண்டிய விதத்தில் அதைப் படிக்கின்றனர். அவர்களே அதில் நம்பிக்கை கொண்டவர்கள். அதை ஏற்க மறுப்போரே இழப்பை அடைந்தவர்கள்.

122. இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கிய அருட்கொடையையும், உலகத்தாரை விட உங்களைச் சிறப்பித் திருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!16

123. ஒருவர், இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை1 அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெறப்படாது. எவருக்கும் எந்தப் பரிந்துரையும் பயன்படாது.17 அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

124. இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். "எனது வழித் தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது'' என்று அவன் கூறினான்.245

125. அந்த ஆலயத்தை33 மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக!34 மகாமே இப்ராஹீமில்35 தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! "தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.

126. "இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக34 ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' என்று இப்ராஹீம் கூறிய போது, "(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேத னையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது'' என்று அவன் கூறினான்.

127. அந்த ஆலயத்தின்33 அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது "எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.)

128. "எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' (என்றனர்.)

129. "எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (என்றனர்.)36

130. தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில்1 நல்லோரில் இருப்பார்.

131. அவரது இறைவன் "கட்டுப்படு!' என்று அவரிடம் கூறிய போது "அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்'' என்று அவர் கூறினார்.

132. "என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே295 தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.

133. யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? "எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?'' என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்ட போது "உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்றே (பிள்ளைகள்) கூறினர்.

134. அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.265

135. "யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்'' என்று கூறுகின்றனர். "அவ்வாறல்ல! உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணை கற்பித்தவராக இருந்ததில்லை'' எனக் கூறுவீராக!

136. "அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம்;37 அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுங்கள்!

137. நீங்கள் நம்பிக்கை கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நேர் வழி பெறுவர். புறக்கணிப்பார்களாயின் அவர்கள் எதிரிகளே. அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் உமக்குப் போதுமானவன்; அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

138. "(நாங்கள்) அல்லாஹ் தீட்டும்வர்ணத்தை38 (ஏற்பவர்கள்.) அல்லாஹ்வை விட அழகிய வர்ணம் தீட்டுபவன் யார்? நாங்கள் அவனையே வணங்குபவர்கள்'' (என்று கூறுங்கள்!)

139. "அல்லாஹ்வைப் பற்றி எங்களிடம் விதண்டா வாதம் செய்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. நாங்கள் அவனுக்கே உளத்தூய்மையுடன் நடப்பவர்கள்'' என்று கூறுவீராக!

140. "இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) வழித் தோன்றல்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? நன்கு அறிந்தோர் நீங்களா? அல்லாஹ்வா?'' என்று கேட்பீராக! அல்லாஹ்விடமிருந்து தனக்குக் கிடைத்த சான்றை மறைப்பவனை விட அநீதி இழைத்தவன் யார்? நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

141. அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்ததைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.265

142. "ஏற்கனவே இருந்த அவர்களின் கிப்லாவை விட்டும் (முஸ்லிம்கள்) ஏன் திரும்பி விட்டனர்?'' என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். "கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்'' என்று கூறுவீராக!

143. இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம்.39 அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.

144. (முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்பு வீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்!430 "இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை'' என்று வேதம் கொடுக்கப்பட்டோர்27 அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

145. வேதம் கொடுக்கப்பட்டோரிடம்27 அத்தனை சான்றுகளையும் (முஹம்மதே!) நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீர் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுப வராக இல்லை. அவர்களிலேயே ஒருவர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சையை நீர் பின்பற்றினால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

146. நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள்,27 தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள்.25 அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

147. இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும். எனவே சந்தேகம் கொள்பவராக ஆகி விடாதீர்!

148. ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்த

Recommended